முதலீடோ இளமை!? – மூழ்கியதோ வாழ்க்கை !

 

நம் இளைஞன் சம்பாதிப்பு என்ற பெயரில் பா(சத்திற்கே)திப்பு விளைவிக்கின்றனர்,அயல் நாட்டிற்குச் சென்று தன் வாழ்க்கையைத் தின/வருடந்தோறும் கரைத்து கொண்டிருக்கும் இளைய சமூகத்தைப் பற்றிய என் ஆதங்கமே இந்த பதிவு
அவர்: என்னடா மச்சான் ரொம்ப நாள் (எதோ இவருக்கு அவர் மேலுள்ள அக்கறை என்று நினைத்து விட வேண்டாம்)இருக்குற மாதிரி இருக்கிறதே எங்கேயும் ட்ரை பண்றியாடா…. ?”
இவர்: ஆமாடா மச்சான் ட்ரை பண்ணிட்டுதான் இருக்கேன் எல்லா பக்கமும் “லாக்” ஆகி போச்சே நமக்கெல்லாம் “லக்” வேணும்டா
அவர்: அடப்பாவி நீ போன வருடம் தானே அமெரிக்காவிலிருந்து வந்தே அதற்குள்ள ஏன்டா பெரிய நாடுக்கு ட்ரை பண்றே சின்ன நாட்டிற்கு ட்ரை பண்ண வேண்டியது தானேடா
இவர்: இல்லடா மச்சான் போனா பெரிய நாடு இல்லே… ஊருலேயே இருக்கனும் (என்ன ஒரு குடும்ப கவலை/அக்கறை)
இன்றைய சமுதாயம்….
பணத்தைத் தேடி
குடும்பத்தை மறந்த
தலைவன்..
ஒரு காலத்தில் வெளிநாட்டுக்குப் போய் வந்தவர்களைக் கண்களை மலர்த்தி நாம் பார்ப்பதுண்டு. வெளிநாடு சென்று வருவது என்பது ஏதோ அதிர்ஷடம் என நாம் நினைப்போம். ஒரு முறையேனும் கடல் கடந்து சென்று வெளிநாடுகளைக் கண்டுவந்து விடவேண்டும் என்ற தணியாத ஆவல் நமக்கிருந்தது என்பது உண்மை. ஆனால் இக்காலத்தில் வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார். அயல்நாடுகளுக்குப் பயணம் என்பது நம் கிராமங்களிலுள்ள படித்த/படிப்பறிவில்லதவர்கள் கூடதற்போது சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது.
வேலை தேடி அயல் நாடு
சென்று எல்லாம் தொலைத்து
வெறும் கையில் நாடு
திரும்பும் இளைஞர்கள்…
பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்ததும் உடனே தேடுவது ஒரு நல்ல வேலை…! கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் அரசாங்கமோ, பெரிய கம்பெனியோ இந்தா அப்பாயின்மென்ட் ஆர்டர்என்று தூக்கி கொடுத்து விடாது. வேலைக்கான தகுதியை வளர்த்து கொள்வதுடன், தனக்கு தகுந்த வேலையை தேடுவதும் அவசியம். ஆனால் வெளியிடங்களில் வேலை தேடியே சோர்ந்து போய் விடுகிறான் நம் இளைஞன். எதற்கெல்லாமோ, எதன் பின்னாலோ ஓடி நாட்களை வீணாக கழிப்பவர்கள், வேலை மட்டும் உடனே கிடைத்துவிட வேண்டும் என்று ஆசைப்படுவது என்ன நியாயமோ தெரியவில்லை.
அதுவும் ஒருசிலர் படிக்கும் போதே வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசையை, ஆர்வத்தை வளர்த்து கொள்கிறார்கள்… இங்கே தகுந்த வேலையோ சம்பளமோ கிடைக்காது என்கிற விதமாக இருக்கும் அவர்களின் பேச்சுக்கள் எல்லாம்…!?
ஆயிரம் வசதிகள் இருந்தாலும் சொந்த நாட்டில் சொந்த பந்தங்களுடன், மனைவி குழந்தைகளுடன் ஒன்றாக வாழும் வாழ்க்கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை.
* மனைவி குழந்தைகளை விட்டு சென்று, பல வருடம் கழித்து திரும்பி வரும் சிலருக்கு,நெருங்கிய அந்த உறவுகளே அன்னியமாகி விட்டதை போல தெரியும் சோகம் மிக கொடுமை ?!
* முதலில் அன்பை பொழிந்த உறவுகள், வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை அனுபவித்த பின்னர், வெறும் பணம்காய்ச்சி மரமாக மட்டுமே உங்களை பார்க்க கூடிய நிலை சகஜம் !!
* பணத்தின் ருசி கண்டவர்கள் ஒரு சிலரின் மூணு/இரண்டு வருட அக்ரீமென்ட் முடிந்த பிறகும் மீண்டும் போக சொல்லி வற்புறுத்துவது வேதனை !
வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் வசதியானவர்களைப் பற்றி இங்கே சொல்லவில்லை…இந்த நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று அப்பாவித்தனத்தையும், அடுத்தவரிடம் கடன் வாங்கியாவது விமானத்தைப் பிடிக்கும் இளைஞனைச் சொல்கிறேன்…
கடன் வாங்கி வெளிநாட்டைத் தேடிச் செல்வதை விட அதே பணத்தை வைத்து சொந்த ஊரில் சிறு தொழிலை தொடங்கலாமே என ஏன் யோசிப்பதில்லை…?!
பிழைக்க வழி வகை தெரியவில்லையா ?? துணிச்சல் இல்லையா ?? முன்ன பின்ன தெரியாத ஊரில் வாழ தைரியத்துடன் செல்லும் இளைஞனுக்கு, அந்த துணிச்சலை மூலதனமாக வைத்து சொந்த நாட்டில் உழைத்து சம்பாதிக்க தெரியவில்லை என்னும் போது வருத்தம் ஏற்படுகிறது.
நம் நாட்டை குறை சொல்ல ஆயிரம் காரணங்களை அடுக்கலாம். ஆனால் ஏன் இங்கே உழைக்க முடியவில்லை என்ற கேள்விக்கு சரியான பதில் இருக்கிறதா ?
அப்படி உங்களுக்கு சாதகமாக பதில் வைத்திருந்தாலும், இங்கே இருக்கும் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டி வருமே…?!
அரசாங்கம், ஊழல், லஞ்சம் என்று எந்த வித சமாளிப்பும் தேவையில்லை. உழைக்க கூடிய திறன் , மனோதிடம், உத்வேகம், தன்னம்பிக்கை, சுய மரியாதை இருந்தால் எங்கேயும் வாழ முடியும். கை நிறைய சம்பாதிக்க முடியும்.
டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்……
  • பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்……
  • இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்…
  • கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது…தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்…
  • நான் இங்கே நல்லா இருக்கேன் என்று எப்போதும் சொல்லும் இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்…
  • வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும்முன் வாசனைப்பூச்சு வாங்க மறப்பதில்லை நாங்கள்…(எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க…)
  • கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள், நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும் களைத்துத்தான் போகிறோம்…
  • எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்…
  • வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள்…
  • திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள்…
உனக்கென்ன! விமானப்பயணம், வெளிநாட்டு வேலை என்றெல்லாம் உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது!
ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம் எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு
செய்திருக்கின்றோம்…இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது…
நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது…
யாருக்காக…? எதற்காக…? ஏன்…?
தந்தையின் கடன், தங்கையின் திருமணம், தம்பியின் படிப்பு,
சொந்தமாய் வீடு குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம்… தோரணம்போல் கண் முன்னே…”
மனைவியின் கண்சிமிட்டல்/சினுங்கள், அம்மாவின் அரவணைப்பு,
அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி
எத்தனையோ இழந்தோம்…..
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்…
இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?”
என்ன செய்வது, எங்க தலைஎழுத்து இப்படி வெளிநாட்டில் லோல் படணும் என்று இருக்கிறது என்று சலித்து கொள்ளாதீர்கள், உங்களுக்கு நீங்கள் தான் முதலாளி உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமையும் உங்களது தானே ?! அப்புறம் என்ன ?! வேறு யாருக்கோ உங்களின் உழைப்பும், சக்தியும் வீணாகிறது, அதை உங்கள் சொந்த முன்னேற்றத்துக்கு பயன் படுத்தினால் அபரீதமான வளர்ச்சியை காணவும் முடியும், இறுதி வரை நிம்மதியான ஒரு வாழ்க்கையும் வாழலாம்…!?
இதிலும் ஒரு சந்தோசம் நம்மூரில் ஒரு சிலர் வெளிநாட்டு மோகத்தை முற்றிலும் அகற்றெரிந்து சொந்தக் கடைகளை அவர்களின் முன்னேற்றங்களினால் சிறு தொழிலில் ஈடுபாடு காட்டியுள்ளனர்/காண முடிகிறது ஊதாரனத்திற்கு நம்மூர் பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் ஒரு பஜார் போல் காட்சியளிக்கின்றன அல்ஹம்துல்லிலாஹ்..
இப்படி ஒவ்வொரு இளைஞரும் உத்வேகத்துடன் உழைக்க தயாராகிவிட்டால் வெளிநாடு செல்வது என்பது பழங்கதையாகி விடுமல்லவா ?
அதிரை தென்றல் (Irfan Cmp)

  நம் இளைஞன் சம்பாதிப்பு என்ற பெயரில் பா(சத்திற்கே)திப்பு விளைவிக்கின்றனர்,அயல் நாட்டிற்குச் சென்று தன் வாழ்க்கையைத் தின/வருடந்தோறும் கரைத்து கொண்டிருக்கும் இளைய சமூகத்தைப் பற்றிய என் ஆதங்கமே இந்த பதிவு… அவர்: “என்னடா மச்சான் ரொம்ப நாள் (எதோ இவருக்கு அவர் மேலுள்ள அக்கறை என்று நினைத்து விட வேண்டாம்)இருக்குற மாதிரி இருக்கிறதே எங்கேயும் ட்ரை பண்றியாடா…. ?” இவர்: “ஆமாடா மச்சான் ட்ரை பண்ணிட்டுதான் இருக்கேன் எல்லா பக்கமும் “லாக்” ஆகி போச்சே நமக்கெல்லாம் “லக்”…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *